கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி கைது செய்தனர். மேலும் மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது 5 பேர் சிறையில் உள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அவர்கள் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையை மேற்கொள்ளவில்லை. தொடக்கத்தில் இருந்தே விசாரணையை மேற்கொண்டனர். இந்த குழு கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு-க்கு சொந்தமான சின்னப்பம் பாளையம் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதிகாரி கருணாநிதி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். பண்ணை வீட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. வீடியோ ஆதாரங்களை கொண்டு வீட்டில் உள்ள தடயங்களையும், ஆவணங்களையும் சரிபார்த்து வருவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 30 நிமிடத்திற்கு மேலாக ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் சிபிஐ-யின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனை குறித்த அறிக்கையை சிபிஐ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.