குளச்சல்: இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பானி புயல் காரணமாக குமரி கடல் பகுதியில் கடந்த வாரம் பலத்த காற்று வீசும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விசைப்படகுகள், கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குளச்சல் துறைமுக பாலம் பகுதியில் மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குவதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் பரந்த மணற்பரப்பில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை கண்டுகளித்து செல்வர். கடந்த வாரம் குளச்சல் கடல் சீற்றமாக இருந்ததால் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு முழுவதும் சூழ்ந்து நீர்தேங்கி நின்றது. இதனால் மாலை வேளை கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் மணற்பரப்பில் உட்கார முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.