பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்த விவகாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர்களை குலைநடுங்க வைத்த இந்த சம்பவத்தில் சிக்கியவர்களின் வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், பிடிபட்ட நபர்கள் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலத்தில் சிக்கியவர்கள் விஐபி வீட்டு பிள்ளைகள் என்பது தான். இந்த வழக்கில் சிக்கிய அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜன் என்பவரை உடனடியாக கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கியது. நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் கொங்கு மண்டலத்தில் ஆளுங்கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் வீடியோக்களில் பாதிக்கப்பட்ட பெண் கதறும் குரல் நாட்டையே உலுக்கிவிட்டது.