பிஸ்வனாத்: அசாமில் மாட்டிறைச்சி விற்றதாக கூறி முதியவர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஸ்வனாத் என்ற இடத்தில் நடந்தேறிய இந்த மனிதாபிமானமற்ற நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஷாகுத் அலி என்ற 68 வயது முதியவரை பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொள்ளும் குண்டர்கள், சாலையில் தடுத்து நிறுத்தினர். மாட்டிறைச்சி விற்பனை செய்தார் எனக்கூறி அவர்கள், அந்த முதியவரை சராமாரியாக தாக்கியுள்ளனர். தாங்கள் வங்காள தேசத்தை சேர்ந்தவரா என்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் உள்ளதா எனவும் குண்டர்கள் சரமாரியாக கேள்வியெழுப்பினர்.
மாட்டிறைச்சி விற்பனைக்கான உரிமத்தை காட்டும்படியும் கூச்சலிட்டுள்ளனர். ஷாகுத் அலி என்ற அந்த முதியவரை, பன்றி இறைச்சி உண்ண வைக்க குண்டர்கள் முயற்சி செய்ததாகவும் குற்றசம்சாட்டப்பட்டுள்ளது. ஐந்து பேர் முன்பு முட்டிக்கால் போடப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் தன்னை விட்டு விடுமாறு அவர் கேட்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படுகாயமடைந்த முதியவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளார். இந்தியாவில் மாட்டின் பெயரால் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி