ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு எம்பியாக அதிமுகவை சேர்ந்த அன்வர்ராஜா, 4,05,945 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முகமது ஜலீல் 2,86,621 வாக்குகள் பெற்றார். பாஜ வேட்பாளர் குப்புராம் 1,71,082 ஓட்டுகள் பெற்று 3ம் இடம், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 62,160 வாக்குகள் பெற்று நான்காமிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற பின்னர் அன்வர்ராஜா எம்பி தொகுதியை கவனிக்காமலே விட்டு விட்டார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. இதனால் வெளிமாநில பக்தர்கள் அவதியடைகின்றனர்.மீன் வர்த்தகம் பாதிப்பு தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, தொடங்கப்பட்ட சேது கால்வாய் திட்டம் தற்போது வரை கானல் நீராக உள்ளது. இத்திட்டம் தொடங்கினால் ராமேஸ்வரம் பகுதி துறைமுகம் ஆகும். இதனால் தொழில் வளர்ச்சி அடையும். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், இலங்கை கடற்படையால் இன்னல்களை சந்திக்கும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும் ராமநாதபுரம் அதிமுக எம்பி அன்வர்ராஜா மக்களவையில் குரல் கொடுக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் பல்லாயிரம் கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ராமநாதபும் மாவட்ட அதிமுகவில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. சிட்டிங் எம்பியான அன்வர் ராஜாவுக்கும், அமைச்சர் மணிகண்டனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாக உள்ளது.