ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாகிஸ்தானில் பாலக்கோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் இருந்து காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 110 முறை பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை தாக்குதலை தொடங்கியது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் வீரர் கரம்ஜித் சிங் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்றார்.