குமரி: கன்னியாகுமரி அருகே வாங்கிய கடனை திருப்பித் தராததால் 4 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்யத அந்தோணிசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர். தம்மிடம் கடன் வாங்கிய சகாய சிந்துஜா என்பவரின் குழந்தையை அந்தோணிசாமி என்பவர் கடத்தி சென்று கொன்று விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ். இவரது மனைவி சகாய சிந்துஜா. இவர் ஆரோக்கியபுரத்தைச சேர்ந்த அந்தோணிசாமி என்பவரிடம் ரூ.58 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பி செலுத்துவதில், சிந்துஜாவுக்கும், அந்தோணிசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
கடத்தி சென்ற 4 வயது சிறுவன் ரெய்னாவை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரை குளம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தோணிசாமியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமைறைவாக ஓரிடத்தில் பதுங்கியிருந்த அந்தோணிசாமியை போலீஸார் தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்துள்ளனர். கடனை திருப்பி தராததால் சிந்துஜாவின் குழந்தை ரெய்னா கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதிதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.