கோவை: கோவை மாவட்டம் நல்லாம்பாளையம் பகுதியை சார்ந்த சாந்தகுமார் மகள்கள் தமிழ்ஈழம் (20), ஓவியா (14) ஆகியோர் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது தந்தையுடன் வந்து தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். கலெக்டர் ராசாமணி இல்லாததால் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரியிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், ‘‘தற்போதைய சூழலில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை செய்திதாள்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் அறிந்து வருகிறோம். இக்கால கட்டங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியான நிலையில், தினமும் பெண்கள் மீதான வன்மங்கள் அதிகப்படியாக உள்ளதால் சுயமாக எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் எங்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.