திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். ஆந்திர தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து தரப்பினரும் பயன் அடையும் விதமாக மாநில அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. குறிப்பாக விவசாயக் கடன், மகளிர் குழு கடன் ரத்து செய்யப்பட்டு, மாநிலத்தை அனைத்து விதத்திலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று வருகிறோம். எனவே இந்த ஐந்து ஆண்டுகள் செய்த நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் கருத்தில் கொண்டு எங்களை மீண்டும் ஆட்சி அமைக்கும் விதமாக ஆசிர்வதிக்க வேண்டும். இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு முதல்வராக வேண்டுமா அல்லது ஜெகன்மோகன் ரெட்டி மூலமாக தெலுங்கானாவை சேர்ந்த சந்திரசேகர் ராவ் ஆட்சி புரிய வேண்டுமா என்பதை வாக்களர்களே முடிவு செய்ய வேண்டும். ஆந்திராவின் வளர்ச்சியை தடுப்பதற்காக சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, மோடி ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு வராத ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தின் கட்சி அலுவலகத்தில் இருந்தபடி தெலங்கானாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.