திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்னை வழியாக திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். பின்னர் கார் மூலம் திருமலையில் உள்ள கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி நேற்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேதபண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.