ஒருதலைக்காதலால் வாலிபர் வெறிச்செயல் : பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை கழுத்தறுத்து கொடூர கொலை

குறிஞ்சிப்பாடி:  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரம்யா(23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பள்ளியை திறப்பதற்காக ரம்யா வந்தார். அங்கு வேறு யாரும் இல்லை. அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் ஆசிரியை ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதனால்  நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆட்டை அறுப்பது போல் ரம்யாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் இறந்தார். சிறிது நேரத்தில் பள்ளிக்கு வந்த சக ஆசிரியர்கள் ரம்யா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து  கூச்சல் போட்டனர். இதுகுறித்த தகவலை பள்ளி நிர்வாகத்துக்கும், குறிஞ்சிப்பாடி போலீசாருக்கும் தெரிவித்தனர். நெய்வேலி டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார், பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். ரம்யாவின் சடலத்தை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணை நடத்தினர்.

ரம்யாவின் தந்தை சுப்பிரமணியன் போலீசாரிடம் கூறியதாவது: விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரிகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர். இவர், தேவனாம்பட்டினத்தில் உள்ள தந்தை பெரியார்  அரசு கல்லூரியில் படித்து வந்துள்ளார். ரம்யா, கடலூர் அரசு மருத்துவமனை அருகே தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் பக்கத்து ஊரில் வசித்து வந்ததால், அடிக்கடி ஒரே பேருந்தில் பயணம் செய்து நட்பாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ரம்யாவை  ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்த ராஜசேகர் தனது காதலை ரம்யாவிடம் தெரிவித்தார். இதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்தார்.  இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது குடும்பத்தினருடன் பெண் கேட்டு எனது வீட்டுக்கு வந்தார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம்.  இதற்கு ராஜசேகர், எனக்கு பெண் தரவில்லை என்றால் உன் பெண்ணை உயிரோடு விட மாட்டேன் என மிரட்டினார். எனவே இந்த சம்பவத்துக்கும், ராஜசேகருக்கும் தொடர்பு இருக்கலாம். இவ்வாறு போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: