பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்தது. மறைந்த ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நடந்தபின் கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளியாக உறுதி செய்து நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தீர்ப்பளித்தார்.இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், 2015 மே 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில் நான்கு பேரையும் விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகளை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.