பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை மணி சிங்கி இறால்

ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர் வலையில் அரிதாக சிக்கிய மணி சிங்கி இறால் ஆயிரக்கணக்கில் விலை போனது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு நேற்று கரை திரும்பிய படகுகளில் விலைமீன், பாரை மீன் உள்ளிட்ட பலவகை மீன்கள் அதிகளவில் இருந்தது. மீனவர் ஒருவரின் படகில் அரிதாக கிடைக்கும் 2 கிலோ எடையுள்ள மணி சிங்கி இறால் உயிருடன் இருந்தது. மீன்கள் அனைத்தையும் மீனவர்கள் படகில் இருந்து கூடைகளில் கொண்டு வந்து கடற்கரையில் விற்பனைக்கு அடுக்கி வைத்தனர். வியாபாரிகள் மீன்களை அதிகளவில் விலைக்கு வாங்கி சென்றனர்.

மேலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மணி சிங்கி இறாலை, வியாபாரிகள் போட்டி போட்டு ரூ.9 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். மீனவர்கள் கூறுகையில், ‘‘வழக்கமாக மணி சிங்கி இறால் 150 கிராம் முதல் 250 கிராம் வரைதான் இருக்கும். இதனை தொட்டிகளில் போட்டு வளர்த்து அதிக எடை வந்தவுடன் வியாபாரிகளிடம் விற்பனை செய்வோம். எப்போதாவதுதான் அதிக எடையுடன் இதுபோல் மணி சிங்கி வலையில் உயிருடன் சிக்கும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: