நாகர்கோவில்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சொந்த ஊர் வந்து சேர்ந்தனர். ஈரானில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்துறையை சேர்ந்த சுதர்சன்(37), தூத்தூக்குடி மாவட்டம் பெரியதாழையை சேர்ந்த சுதர்சன்(51), பிரதீப்(38), நெல்லையை சேர்ந்த சாந்தாகுரூஸ்(36), சுபாஷ்(29) ஆகிய 5 மீனவர்கள் எல்லை தாண்டியதாக கத்தாரில் சிறை பிடிக்கப்பட்டனர்.
ஜனவரி 13ம் தேதி கைதான மீனவர்கள் 5 பேரும் இந்திய தூதரக முயற்சியால் கத்தார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் டெல்லி விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்து சேர்ந்தனர். நேற்று மாலை 4.40 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் வாயிலாக 5 பேரும் இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து தமிழக மீன்துறை ஏற்பாடு செய்த வாகனத்தின் வாயிலாக நாகர்கோவில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி