சிவகாசி: சிவகாசி அருகே வேலையில்லாததால் பட்டாசு ஆலை பெண் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, முருகன் காலனியை சேர்ந்தவர் சுகுணாவேணி (52). கணவர் இறந்து விட்டார். பிள்ளைகள் திருமணம் முடிந்து வெளியூரில் உள்ளனர். தனியாக இருக்கும் சுகுணாவேணி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த 2 மாதமாக பட்டாசு ஆலைகள் பூட்டிக் கிடப்பதால், சுகுணாவேணி மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கினார். வேலையில்லாததால், கடனை கட்ட முடியவில்லை. இதனால் மனம் உடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.