விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை

மதுரை: விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின்போது பொய்யான கல்வித்தகுதியை கூறி மோசடி செய்ததாக கூறி கணவரிடம் விவாகரத்து கோரி மனைவி சுபத்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி 2014-ம் ஆண்டு திருச்சி குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். வழக்கு முடிவடையும் நேரத்தில், கடைசி தருவாயில் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று கணவர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதுடன், சேர்த்து வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

திருச்சி குடும்பநல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவாகரத்து வழக்கில் எதிர் தரப்பு மனுத்தாக்கல் செய்ய கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு தாக்கல் செய்து 9 மாதம் முதல் ஓராண்டுக்குள் எதிர்மனுதாரர் மனு செய்ய கால நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. விவாகரத்து வழக்குகளில் கடைசி நேரத்தில் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்து இழுத்தடிக்கப்படுகிறது. விவாகரத்து வழக்கு விசாரணை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.

The post விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: