ஊத்தங்கரை: பாம்பாறு தரைப்பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பிரமாண்ட பெருமாள் சிலை 2வது நாளாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து ராட்சத இயந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, ராட்சத லாரியில் ஏற்றி கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, கடந்த மாதம் 7ம் தேதி புறப்பட்டது. வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, கடந்த 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் காலை ஊத்தங்கரை நோக்கி புறப்பட்டது.