தெருநாய் கடித்து 20 ஆடுகள் பலி: இழப்பீடு வழங்க உரிமையாளர் கோரிக்கை

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவர், 120 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். தினசரி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில் வீடு அருகே, வயல்காட்டில் உள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு, மாலையில் பட்டியில் அடைத்துள்ளார். இரவில் பட்டியில் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை விரட்டி, விரட்டி கடித்து குதறின. இதில் 20 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன; 5 ஆடுகள் காயமடைந்தன.

ஆடுகளின் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த செந்தூர்பாண்டி தெருநாய்களை விரட்டிவிட்டு, சாயல்குடி கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் வந்த கால்நடை மருத்துவர், காயமடைந்த ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளித்தார். குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் பலியானதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தூர்பாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: