தென் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்… விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால் இன்று (03.03.2026) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ. 9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை துறையில் சிறப்பு உயர்திறன் மையம் (centre of Excellence) திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ரூ.9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு அறுசை சிகிச்சை துறையில் சிறப்பு உயர்திறன் மையம் (centre of Excellence)

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தொடர்ந்து பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏற்கெனவே மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, கலைஞரின் வரும் முன்காப்போம் திட்டம், இதயம் காப்போம், பாதம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், சிறுநீரக பாதுகாப்பு சீர்மிகு திட்டம், மக்களை தேடி ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், செயற்கை கருத்தரிப்பு மையங்கள், கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் (HPV) மற்றும் உலகில் மிக பெரிய குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை என்பது உலகில் மிக பெரிய கவனத்தை பெற்றுள்ள துறையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து விளையாட்டுத் துறையில் இன்று உலகம் எங்கும் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்ற வண்ணம் இருந்து வருகிறார்கள். அவர்களை எல்லாம் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு மிக பெரிய அளவிலான முயற்சிகளை எடுத்து விளையாட்டுத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய வகையிலான பல்வேறு விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக இருந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையில் முக்கியமான இடமாக மாற்றியிருக்கிறார். அந்தவகையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு அல்லது அவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு பிரத்யேக சிகிச்சைகளுக்கு என்று ஒரு அமைப்பு நிறுவப்பட்டு அது பயன்பாட்டில் இருந்துக் கொண்டிருக்கின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், இந்த பன்னோக்கு மருத்துவமனை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்துள்ளார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் முதன் முறையாக இங்கு ஏற்படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் கருவுற்ற ஓரிரு வாரங்களில் மரபணு தன்மையை கண்டறியும் Maternal Screening Analyser ஆய்வகத்தை இங்கே திறந்து வைத்தார்கள். பல்வேறு இந்திய அளவிலான சிறப்பு கட்டமைப்புகளை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு ரூ.9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு தீர்வு என்கின்ற வகையில் Center of excellence என்கின்ற வகையில் விளையாட்டு மருத்துவத்திற்கு என்று மருத்துவக்கட்டமைப்பு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் உள்ள கிராமமாக இருந்தாலும், குக்கிராமமாக இருந்தாலும் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை மையம் மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஓரிரு இடங்களில் இதற்குரிய மருத்துவ வசதிகள் இந்தியாவில் இருந்தாலும் மாநில மருத்துவமனைகளில் முதன்முறையாக சிகிச்சை மையம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ரூ.350 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்கள். மேலும் சில நாட்களுக்கு முன்பு ரூ.180 கோடி மதிப்பீட்டிலாக மருத்துவக் கட்டமைப்புகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். நாளை காலை (04.03.2026) ரூ.194.16 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமை செயகலத்திலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

வெயில் தாக்கம் தொடர்பான கேள்விக்கு
இது தொடர்பாக நேற்று பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் இது தொடர்பாக கண்காணித்து வருகிறார்கள். பொதுவாக சின்னம்மை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அக்குழந்தைகள் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெயில் தாக்கம் அதிக்கரிக்கும்போது அதனை தடுப்பதற்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

Related Stories: