கோவை: கோவைக்கு ₹2,378 கோடியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வெறும் அறிவிப்போடு நிற்கிறது. கோவை மாநகரில் கடந்த 2014-ம் ஆண்டு மேயர் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, பிரசாரத்துக்கு வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகரின் கட்டமைப்பு பணிகளுக்காக ₹2,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.இவற்றில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற, ‘’சூயஸ்’’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் கட்டமைப்பு ஏற்படுத்தவே, இன்னும் நான்கு ஆண்டுகளாகி விடும். அதனால், இத்திட்டம், 2023-ம் ஆண்டுதான் சாத்தியமாகும் என்கிறார்கள் பொறியாளர்கள்.‘’ஸ்மார்ட் சிட்டி’’ திட்டத்தில் துவக்கிய, ‘’ஓபோ’’ சைக்கிள் திட்டம், அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பின்றி, தோல்வியை சந்தித்தது. வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டம், ‘’பஸ் போர்ட்’’டாக பெயர் மாற்றப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிதி ஒதுக்கி, கட்டுமான பணி மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர். ஆனால், 5 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இன்னமும் ஆரம்பக்கட்ட பணிகூட துவங்கவில்லை. கட்டட மறுசுழற்சி மையம் கட்டுவதற்கு ஒப்பந்தமிட்ட நிறுவனம் இயந்திரம் தருவிக்காததால், ரத்து செய்யப்பட்டு விட்டது. புதிதாக ‘’டெண்டர்’’ கோர, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.