புதுடெல்லி: ‘வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘பபுக்’ புயல், அந்தமானில் இன்று கரையை கடக்கும்’ என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் `பபுக்’ என்ற புயல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘பபுக்’ புயல் தற்போது வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய எல்லையை அடைந்துள்ளது. அந்தமானுக்கு தென்கிழக்கே 720 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், அந்தமானை நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் இந்த புயல், இன்று அதிகாலை அந்தமான் தீவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 70 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும். பின்னர், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மரை நோக்கி செல்கிறது.