சென்னை: அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது தொடர்பான தமிழக அரசின் சித்திக் குழு முதலமைச்சரிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு முதலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் அக்டோபர் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த குழுவிடம் 7 அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் மற்றும் தனிநபர்களும் மனுக்களை அளித்தனர். ஆசிரியர்களே பெருமளவில் மனுக்களை அளித்துள்ளனர். ஏழாவது ஊதிய குழு தொடர்பான நிலுவைத் தொகை, புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.