நாகை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் 7வது நாளாக தொடர்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கணினி, இணைய வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 10ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகையில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே பதாகைகளை ஏந்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நம்பியூர், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி தாலுகாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருவள்ளூர், திண்டிவனம், சிதம்பரம், மயிலாடுதுறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.