5 மாநில பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவுகள் தெரியும்

புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 1.75 லட்சம் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்கள், 8,500 வேட்பாளர்களின் தலைவிதியை இன்று நிர்ணயம் செய்யவுள்ளன. இதன் முடிவுகள், மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் என்பதால் பா.ஜ, காங்கிரஸ், டிஆர்.எஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பதற்றத்துடன் முடிவை எதிர்நோக்கியுள்ளன.

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 6ம் தேதி அறிவித்தது. சட்டீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த 12, 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் தெலங்கானாவில் கடந்த 7ம் தேதி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. 5 மாநிலங்களில், 670 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள 1.74 லட்சம் ஓட்டு பதிவு இயந்திரங்கள், 8,500 வேட்பாளர்களின் தலைவிதியை முடிவு செய்கின்றன.

இன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை  தொடங்கவுள்ளது. இதையொட்டி, 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்கள், அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, அனைத்து வாக்கு இயந்திரங்களும், ஓட்டு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகள்  உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் அவ்வப்போது  முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி  சேனல்களும் நேரடி ஒளிப்பரப்பில் நாளை காலை 6 மணி முதலே களநிலவரத்தை வெளியிட  உள்ளன. காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் முழுமையாக தெரிந்துவிடும். மதியம்  3 மணிக்குள் எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று  தெரியவரும். இந்த முடிவுகள் அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், இதன் முடிவுகளை பா.ஜ, காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பதட்டத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் ஆளும் பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு பா.ஜ முதல்வர் ராமன் சிங் ஆட்சியை தக்க வைப்பார் என ஒரு தேர்தல் கருத்து கணிப்பும், 15 ஆண்டுக்குப்பின் இங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மற்றொரு கருத்துக் கணிப்பும் தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இங்கு பா.ஜ 49 இடங்களையும், காங்கிரஸ் 39 இடங்களையும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து பாஜ தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது. இப்போது 4வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜ தீவிர பிரசாரம் மேற்கொண்டது. எனினும், இவ்விரு மாநிலங்களிலும் பாஜவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி இருக்க வாய்ப்புள்ளதாக ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு பா.ஜ வெற்றி நிச்சயம் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அடித்துச் சொல்கிறார். ஒருவேளை பா.ஜ.வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், பா.ஜ கட்சியில் இருந்து விலகி தேர்தலை சந்தித்த சுயேச்சைகளை இணைத்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ படு தீவிரமாக உள்ளது.

ராஜஸ்தான்

பாஜ கட்சி ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் மொத்தம் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

மிசோரம்

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான மிசோரமில், 40 தொகுதிகளில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இம்மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா

தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 73.20 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் களத்தில் 1,821 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), பாஜ ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ் - தெலுங்கு தேசம் - தெலங்கானா ஜன சமிதி - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் தேர்தல் களத்தில் உள்ளன. இருந்தும் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தல் எண்ணும் மையங்களில் தேவையான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் அதிகாரி ராஜத் குமார் செய்துள்ளார். இங்கு டிஆர்எஸ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அதற்கு பா.ஜ ஆதரவு அளிக்கும் என கூறப்படுகிறது. 8 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: