அபு தாபி: நியூசிலாந்து அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன் குவித்து முன்னிலை பெற்றது.ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் வில்லியம்சன் 89, வாட்லிங் 77, ராவல் 45 ரன் விளாசினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் பிலால் ஆசிப் 5, யாசிர் ஷா 3, ஹசன் அலி, ஷாகீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்திருந்தது. அசார் அலி 62, ஆசாத் ஷபிக் 26 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 201 ரன் சேர்த்தது. அசார் 134 ரன் (297 பந்து, 12 பவுண்டரி), ஆசாத் 104 ரன் (259 பந்து, 14 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர்.