சென்னை: ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை அரசு நீக்காவிட்டால் தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கபொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 2009ம் ஆண்டு ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது புதியதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3170 குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370 என்றும் அந்த தேதிக்கு ஒருநாள் பிந்தைய நாளான 2009 ஜூன் 1ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்று அடிப்படை ஊதியத்தை நிர்ணயம் செய்தனர்.