வந்தவாசி: வந்தவாசியில் இருந்து வேலூர் செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் ஓட்டை உடைசல் காரணமாக குடைபிடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வந்தவாசியில் திண்டிவனம் சாலை, செய்யாறு நெடுஞ்சாலை ஆகிய இரண்டு இடங்களில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனைகள் உள்ளது. இதில் செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கு 25க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓட்டை உடைசலாகதான் உள்ளது. மேலும் 13 டவுன் பேருந்துகள் உள்ளன.
வந்தவாசியில் இருந்து செய்யாறு, ஆற்காடு வழியாக வேலூருக்கு டி.என்.25 என்.1720 என்ற எண் கொண்ட 200ம் எண் பேருந்தில் ஓட்டை உடைசல் காரணமாக மழைநீர் ஓழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை சுமார் 11.30 மணிக்கு வந்தவாசியில் இருந்து வேலூர் சென்ற இந்த பேருந்தில் பயணிகள் குடைபிடித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்து கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக இதே நிலையில்தான் உள்ளது. மேலும், பிரேக் பிடிக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள ஓட்டையை கவனிக்காவிட்டால் டிரைவர் பேருந்தில் இருந்து கீழே விழும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பேருந்துகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி