சென்னை: மகள் திருமணத்திற்கு 8 லட்சம் கடன் வாங்கிய நபரை பாக்கி பணம் கேட்டு மிரட்டி தாக்கிய பிரபல ரவுடி மற்றும் பைனான்சியரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலை துலுக்கான தெருவை சேர்ந்தவர் மோகன் (59). இவர் தனது மகள் திருமணத்திற்கு திருவல்லிக்கேணியை சேர்ந்த பைனான்சியர் மொய்தீன் என்பவரிடம் கடந்த 2016ம் ஆண்டு 15 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினார். வட்டியுடன் ₹7 லட்சத்தை மோகன் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள 8 லட்சத்தை திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் 8 லட்சத்தையும் உடனே தர வேண்டும் என்று மொய்தீன் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மொய்தீன், ரவுடி சிவக்குமார் (40) என்பவனை மோகன் வீட்டிற்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், கடந்த 15ம் தேதி மயிலாப்பூர் பகுதியில் மோகன் சென்றபோது, வழிமறித்து ரவுடி சிவக்குமார் மற்றும் பைனான்சியர் மொய்தீன் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மோகன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தன்னை ரவுடி சிவக்குமார் மற்றும் மொய்தீன் ஆகியோர் தாக்கி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளித்தார். அதன்படி, மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி சிவக்குமார் மற்றும் பணம் கேட்டு மிரட்டிய பைனான்சியர் மொய்தீனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி