புதுடெல்லி: ‘‘ராணுவ கொள்முதல் மிகவும் கவனமாகவும், விரைவாகவும் நடந்து வருகிறது. உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் சிறந்தது என ராணுவத்தை திருப்திபடுத்த வேண்டும்’’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ராணுவ தளவாட தொழிற்சங்கத்தின் சார்பில் டெல்லியில் நேற்று ராணுவ கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: உள்நாட்டில் பல்வேறு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. உங்கள் தயாரிப்புகள் மிகச் சிறந்தது என ராணுவத்தினரை நீங்கள் திருப்திப்படுத்த வேண்டும். உங்களிடம் தளவாட பொருட்களை வாங்கும்படி ராணுவத்தை நான் வற்புறுத்த முடியாது. போருக்கு தயார் நிலை என்பது எந்த விதத்திலும் தடைபடக் கூடாது என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். இதற்கு முன் பாதுகாப்புத் துறை அமைச்சர்களாக இருந்த மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லி ஆகியோர் ராணுவ கொள்முதலை எளிதாக்கியதோடு மட்டுமின்றி, வெளிப்படைத் தன்மையையும் ஏற்படுத்தினர்.