புதுடெல்லி: ‘‘புதிய கண்டுபிடிப்புகளின் பலன், சாமானிய மக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் இருக்க வேண்டும்’’ என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனை கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பிரதமரின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தலை கண்காணிப்பதும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு வழங்குவதும் இக்குழு தான். பிரதமர் மோடி, தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பலன் சாமானியனை சென்றடைய வேண்டும். அவை, பொதுமக்களின் தினசரி பிரச்னையை தீர்க்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை எளிதாக்க வேண்டும். அதற்காக, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள், தொழில்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் இடையே வலுவான இணைப்பை ஏற்படுத்தும் பணியை கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையேயான குழியை உடைத்தெறிய வேண்டும். மாவட்ட ரீதியாகவும், மாநில ரீதியாகவும், இயற்கையிலேயே அறிவியல் திறமையுள்ள பள்ளி மாணவர்களை கண்டறிந்து அடல் அறிவியல் ஆய்வகத்துடன் இணைப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார். கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்ப துறையின் முக்கிய அம்சமான இயற்கை கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் உறுப்பினர்கள் விளக்கமளித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி