அவனியாபுரம்: டிடிவி.தினகரனை நாங்கள் அழைக்கவில்லை, பாதை மாறி சென்றவர்களை மட்டுமே அழைக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, சென்னை கிளம்புவதற்கு முன் மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: டிடிவி.தினகரன் அதிமுக உறுப்பினராக கூட இல்லை. அவருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. பாதை மாறி சென்றவர்களை மட்டுமே திரும்பும்படி அழைப்பு விடுத்தோம். டெண்டர் முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டனர். அதை நானே நேரிடையாக வழக்கறிஞர் மூலம் வாதிட்டு தடை பெற்றுள்ளேன். கட்சியையும், ஆட்சியையும் உடைக்க பார்க்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் எங்களை மிரட்டி பார்க்கிறார்கள்.