புதிதாக யானை வழித்தடம் அமைக்கும் திட்டம்; மக்களின் கருத்துகள் முழுவதுமாக அறிந்து செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: மனிதன்-யானை மோதலை தடுக்கும் நடவடிக்கை எனக்கூறி, தமிழக அரசின் வனத்துறை புதிதாக 21 யானை வழித்தடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய யானை வழித்தட அறிவிப்பு நீலகிரி மாவட்டம் கூடலூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், இந்த அறிவிப்பால் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் (ஓவேலி உட்பட) சுமார் 46 கிராமங்கள் மற்றும் 37,856 வீடுகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

கிட்டத்தட்ட கூடலூர் தொகுதியின் 80 சதவீத பகுதிகள் யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மீது பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த யானை வழித்தட திட்டத்தால் பொதுமக்களின் வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆகவே, மக்களின் கருத்தை அறியாமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தை தமிழக அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்து புதிய யானை வழித்தட திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புதிதாக யானை வழித்தடம் அமைக்கும் திட்டம்; மக்களின் கருத்துகள் முழுவதுமாக அறிந்து செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: