புனே: இந்திய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கேப்டன் கோஹ்லி ஹாட்ரிக் சதம் விளாசிய நிலையில், சக வீரர்கள் ஒத்துழைக்காததால் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்தது. ஷாய் ஹோப் அதிகபட்சமாக 95 ரன் (113 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். நர்ஸ் 40 (22 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 37 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹோல்டர் 32, கே.பாவெல் 21, ஹேம்ராஜ், ரோச்* தலா 15 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 4, குல்தீப் 2, புவனேஷ்வர், கலீல், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 284 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் 8 ரன் எடுத்து ஹோல்டர் வேகத்தில் கிளீன் போல்டானார். தவான் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தது. தவான் 35 ரன் எடுத்து வெளியேறினார். ஒரு முனையில் கோஹ்லி உறுதியுடன் விளையாட, ராயுடு 22 ரன், ரிஷப் பன்ட் 24 ரன், டோனி 7, புவனேஷ்வர் 10 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.