புதுடெல்லி: ராஜஸ்தானில் ஆரவல்லி மலைத்தொடரில் 31 சிறிய மலைகள் மாயமானதை அறிந்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, இந்த மலையில் 115.34 ஹெக்டேரில் நடக்கும் சுரங்க பணிகளை 48 மணி நேரத்தில் நிறுத்தும்படி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வட இந்தியாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர், டெல்லி அருகே தொடங்கி அரியானா, ராஜஸ்தான், குஜராத் என நாட்டின் மேற்கு பகுதி வரை நீண்டுள்ளது. 700 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மலைத்தொடரில் ராஜஸ்தான் பகுதியில் இருந்த 31 சிறிய மலைகளை சுரங்க மாபியாக்கள் சூறையாடி விட்டதாக மத்திய அரசின் அதிகாரமளித்தல் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில், இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் அரசும் ஆரவல்லி மலைத் தொடரில் நடக்கும் சுரங்கங்களின் நிலவரம் பற்றிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: ஆரவல்லி மலைப் பகுதியில் செயல்படும் சுரங்கங்கள் மூலம் ராஜஸ்தான் அரசு ₹5,000 கோடி வருமானம் ஈட்டுகிறது. இப்பகுதியில் 115.34 ஹெக்டேரில் சட்ட விரோதமான சுரங்கங்கள் நடப்பது ஆய்வறிக்கை மூலம் உறுதியாகி இருக்கிறது. தற்போது, அந்த மலைத் தொடரில் 31 சிறிய மலைகள் மாயமாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.