உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா யானை ஊர்வலம் கோலாகலம் : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

மைசூரு : கர்நாடக  மாநிலத்தின் கலாச்சாரத்தை போற்றும் உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் இறுதி  நாளான நேற்று வரலாற்று சிறப்புமிக்க யானைகள் ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.  கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா விழா கடந்த 10ம் தேதி  தொடங்கியது.  அதை தொடர்ந்து கடந்த 9 நாட்களாக காலை முதல் நள்ளிரவு வரை  பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகம், நாட்டுப்புற பாடல், நடனம், குஸ்தி,  திரைப்பட விழா, கருத்தரங்கம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தது. யானைகள் ஊர்வலம்: விழாவின்  இறுதி நாளான நேற்று  விஜயதசமியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமி–்க்க  யானைகள் ஊர்வலம் நடந்தது.  பகல் 2.30 மணிக்கு மைசூரு அரண்மனை வளாகத்தில்  உள்ள கோட்டை ஆஞ்சநேயசாமி கோயில் வளாகத்தில் நந்திகொடிக்கு முதல்வர்  குமாரசாமி பூஜை செய்தார். இதில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள்,  முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா, முதல்வர் குமாரசாமியின்  மனைவி அனிதா உள்பட முதல்வர் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

அதை  தொடர்ந்து  அரண்மனை வளாகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. முதல்வர்  குமாரசாமி, துணைமுதல்வர் பரமேஸ்வர், அமைச்சர்கள் ஆகியோர் பூஜை செய்து  ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். அர்ஜுனா என்ற யானை மீது சாமுண்டீஸ்வரி தேவியை  750 கிலோ எடை கொண்ட தங்க சிம்மாசனத்தில் அமர்த்தி ஊர்வலமாக எடுத்துச்  செல்லப்பட்டது.  அதனருகில் பத்து யானைகள் அணிவகுத்து சென்றன.  பின்னால்  குதிரைப்படை, காலாட்படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர். அனைத்து  மாவட்டங்கள், செய்தி மக்கள் தொடர்புதுறை, சுற்றுலாதுறை, மைசூரு மாவட்ட  நிர்வாகம் உள்பட 64 அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. யானை  ஊர்வலத்தை காண லட்சக்கணக்கில் மக்கள் கூடினர், சாலையின் இரு புறங்களிலும்  மக்களின் தலைகள் மட்டுமே காணப்பட்டது.  யானை ஊர்வல பாதுகாப்பு பணியில் 10  ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நியமனம் செய்யப்பட்டனர். ஊர்வலம் சென்ற  வழியில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டதுடன், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: