டெல்லி ஓட்டலில் குடிபோதையில் துப்பாக்கியை காட்டி பெண்ணை மிரட்டிய பிஎஸ்பி தலைவர் மகன்

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின்(பிஎஸ்பி) முன்னணி தலைவர்களில் ஒருவரது  மகன், ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டும்  வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி ஆர்கே புரத்தில் உள்ள ஹயாத் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் ஒருவருடன் துப்பாக்கியுடன் வாக்குவாதம் செய்யும் காட்சி சமூக  வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ஒருவர், ஓட்டலின் வரவேற்பறை  நுழைவாயிலின் முன்பாக  கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார். அப்போது  ஓட்டலில் இருந்து வெளியே வரும் ஒரு பெண் மற்றும் இரண்டு வாலிபர்களை மடக்கி  வாக்குவாதம் செய்கிறார். அவரது கையில் துப்பாக்கி இருப்பதை கண்டு அந்த பெண்   அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வேகமாக நகர்ந்து செல்ல முயற்சிக்கிறார்.  ஆனாலும் மீண்டும் துப்பாக்கி வைத்திருக்கும் நபர் அவரை தடுக்கிறார்.  அப்போது அங்குள்ளவர்களும் அதிர்ச்சியில் உறைந்து பார்க்கையில், வேறொருவர்  வந்து அந்த பெண்ணைமீட்டு அனுப்பி வைக்கிறார்.  இந்த வீடியோ காட்சிகள் சமூக  வலைதளங்களிலும் வேகமாக பரவிவருகிறது.

இதையடுத்து, ஹயாத் ஓட்டலின் உதவி செக்யூரிட்டி மானேஜர் இந்த துப்பாக்கி மிரட்டல் சம்பவம்  தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இந்த விவகாரம்  குறித்து விசாரணை நடத்தினர். இதில், துப்பாக்கியை காட்டி மிரட்டும் நபர்  ஆஷிஸ் பாண்டே என்பதும், இவர் பகுஜன்  சமாஜ் கட்சியின் தலைவர் என்பதையும்  கண்டறிந்தனர். உ.பி மாநிலம் லக்னோவை சேர்ந்த  ஆஷிஸ்  பாண்டே, பகுஜன் சமாஜ் முன்னாள் எம்பி ராகேஷ் பாண்டேயின் மகன். இவரது  சகோதரர் ரித்தேஷ் பாண்டே, தற்போது உபியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர ஓட்டலில், கழிவறையை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பாண்டே மற்றும் அவரது சகாக்களை  போலீசார் தேடி வருகின்றனர். இந்த  சம்பவம் இணையதளத்தில் வைரலானதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும்  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: