பெங்களூரில் பள்ளி தலைமை ஆசிரியரை வகுப்பறைக்குள் புகுந்து அடித்துக் கொன்ற மர்மக் கும்பல்

பெங்களூர்: பெங்களூரில் பள்ளி தலைமை ஆசிரியரை, 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் 20 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது வகுப்பறைக்குள் நுழைந்து மர்மக் கும்பல் அவர் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. பெங்களூரின் புறநகரான அக்ரஹாரா தசாரஹல்லி என்கிற இடத்தில் இருக்கும் ஹாவனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ரங்கநாதன் (60). நேற்று அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது, 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் ரங்கநாதனை சரமாரியாக தாக்கியத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. ரங்கநாதனை தாக்கிவிட்டு மர்மக் கும்பல் காரில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கும்பலைச் சேர்ந்த ஒருவர் பெங்களூருவின் மஹாலக்‌ஷ்மி லே-அவுட் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அப்பகுதிக்கு சென்று மர்மநபரை கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த நபரின், காலில் சுட்டு அவனை பிடித்துள்ளனர். பிடிபட்ட நபருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஹாவனூர் பள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நிலப் பிரச்னைக்காக இந்த கொடூர செயல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: