செய்யாறு: செய்யாறு தாலுகா செங்கட்டான்குண்டில் பழமையான சவுந்தரநாயகி சமேத நீரு அணிந்தீஸ்வரர் கோயில் சிலைகளை மீட்கவந்த அதிகாரியை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலில் உள்ள பாதாள அறையில் வைத்து சிலைகளை பத்திரப்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா செங்கட்டான்குண்டில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சவுந்தரநாயகி சமேத நீரு அணிந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவன், சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இந்த கோயில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து சுவாமி சிலைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. கடந்த 2006ல் இக்கோயிலில் இருந்த உற்சவர் சிலைகள் திருட்டு போனது. இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக இந்து முன்னணியினர், திருட்டு போன சிலைகளை மீட்கவும், கோயிலில் உள்ள மற்ற சிலைகளை பாதுகாக்கவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் மனு அளித்திருந்தனர். அதன்படி கடந்த 3ம் தேதி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பழனிச்செல்வம் மற்றும் அவரது குழுவினர் மோரணம் போலீசார் உதவியுடன் கோயிலில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் நேற்று முன்தினம் டிஎஸ்பி பழனிசெல்வம், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மேகலா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலை பராமரிப்பவர்களிடம் எஞ்சியுள்ள 14 உலோக சிலைகளை பாதுகாக்க ஆலோசனை வழங்கினர். இதையடுத்து நேற்று காலை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மேகலா, மோரணம் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் கோயிலுக்கு சென்றனர். அப்போது கோயில் பூட்டப்பட்டிருந்தது. சாவியை கேட்டபோது கோயிலை பராமரித்து வருபவர் வெளியூர் சென்றிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் கிராம மக்கள், கோயிலில் உள்ள சிலைகளை எடுக்க விடமாட்டோம் எனக்கூறி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மேகலாவை முற்றுகையிட்டனர்.