18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கானதிருத்திய தேர்வு பட்டியல் முடிவை வெளியிட கூடாது: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காலியான 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2018ம் டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த 18 பணியிடங்களில், நான்கு பணியிடங்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. நான்கு ஆசிரியர்களும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர்.

இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த நிர்மல்குமார் உள்ளிட்ட 5பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே இடஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீட்டின் பலனை வழங்கியதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது.

ஆசிரியர் மற்றும் பொது பிரிவினருக்கு என்று தனித்தனியாக தேர்வுப் பட்டியலை மாற்றியமைத்து நான்கு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணயை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேநேரம், திருத்திய தேர்வுப் பட்டியலை தயாரிக்கும் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளலாம். ஆனால், இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது. வழக்கு முடியும் வரை தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கானதிருத்திய தேர்வு பட்டியல் முடிவை வெளியிட கூடாது: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: