புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த கரிஷ்மா என்பவர் கடந்த 2010ம் ஆண்டு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் மனு ஒன்று அளித்தார். அதில், கடந்த 2010ம் ஆண்டு, பெப்சிகோ இந்தியா நிறுவனம் சார்பில் ‘பெப்சி யங்கிஸ்தான் கா வாவ்’ என்ற போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ₹50 லட்சம் பரிசு தொகை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் நான் பங்கேற்று வெற்றி பெற்றேன். பின்னர் நிறுவனம் சார்பில் எனது வீட்டுக்கு பிரதிநிதிகள் 3 பேர் வந்தனர். அவர்கள் நான் வெற்றி பெற்றதாக என்னை பாராட்டியதோடு, 3 நாளுக்குள் பரிசு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் அதன்பின் வரவில்லை. இதுகுறித்து நிறுவன பிரிதிநிதி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன். அப்போது அவர், நான் நிறுவன பிரதிநிதி அல்ல, கல்லூரி மாணவி என்று தெரிவித்தார். இதனால் எனது பெற்றோர் நேரடியாக நிறுவனத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு பணியாற்றும் ஒரு நபர், பணம் தர முடியாது என மிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளார். வெற்றி பெற்ற எனக்கு அதற்கான பரிசு தொகையை வழங்க வேண்டும் என்று கோரினார்.