குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதில் பேரட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பாரத் நகர் பகுதியில் ஏற்கனவே நடைப்பாதையுடன் தடுப்புச்சுவர் கட்டபட்டது. நேற்று முன்தினம் கனமழையால் இந்த பகுதியில் தடுப்பு சுவர் இடிந்தது. மேலும் நடைப்பதையில் விரிசல் ஏற்பட்டதுடன், ஐந்து வீடுகள் சேதமடைந்தது. இது குறித்து குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் இது வரை அதிகாரிகள் யாரும் பார்வையிட வராததால் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்மழை பெய்யும்பட்சத்தில் மேலும் பாதிப்புகள், அதிகரிக்கும் என்பதால் சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.