சொத்தில் மகளுக்கு பங்கு தர சொன்னதால் தாயை வெட்டி கொன்ற மகன்

துரைப்பாக்கம்: சென்னை பாலவாக்கத்தில் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்குமாறு சொன்னதால், ஆத்திரமடைந்த மகன் தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் காதை அறுத்து நகை பறித்து விட்டு தப்பியவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கம், மணியம்மை தெருவை சேர்ந்தவர் ராணியம்மாள் (64). கணவர் இறந்துவிட்டார். தம்பதிக்கு, 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 5 பேருக்கும் திருமணமாகிவிட்டது. 2 மகன்கள் பெங்களூருவிலும், 2 மகள்கள் சென்னையில் வசிக்கின்றனர். ராணியம்மாளின் கடைசி மகன் பர்னபாஸ் (47). ஆட்டோ டிரைவர்.

இவரது மனைவி பரிமளாமேரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் தான் ராணியம்மாள் வசித்தார். ராணியம்மாள் வசித்த இடத்தை மகன் பர்னபாஸ், மகள் வேணி  ஆகியோரை பிரித்துக்கொள்ளுமாறு, கூறி உள்ளார். இதற்கு பர்னபாஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணியம்மாள் வீட்டு கட்டிலில் தூங்கினார். நள்ளிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பர்னபாஸ் திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் ராணியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில், அவருக்கு 18 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி சாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து கொலையை மறைப்பதற்காக பர்னபாஸ் தாயின் காதை அறுத்து கம்மல் மற்றும் செயினை கழற்றினார். பின்னர் எதுவும் தெரியாதது போன்று மனைவியை எழுப்பி நகைகளை கொடுத்தார். நகையில் ரத்தக்கறை படிந்திருந்தால் அதிர்ச்சியடைந்து என்னவென்று கேட்டார்.

அதற்கு பர்னபாஸ், ‘‘இந்த இடத்தால் உனக்கு இனி எந்த பிரச்னையும் வராது’’’ என மட்டும் கூறிவிட்டு, வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். அதற்கு பிறகு தான் ராணியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, பரிமளாதேவி கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக நீலாங்கரை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.  தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கரை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த பர்னபாசை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: