திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோவை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த புகாரில் சிக்கியவர் பிஷப் பிராங்கோ. ஜலந்தரில் பிஷப்பாக இருந்த இவரை, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கேரள போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதன்படி, 19ம் தேதி கொச்சி திருப்பூணித்துறாவில் உள்ள குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்தில் பிராங்கோ ஆஜரானார். அவரிடம் 3 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் குற்றத்தை செய்தது உறுதியானதால், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இதை திருப்பூணித்துறா மாவட்ட எஸ்பி ஹரிசங்கர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
பிஷப் மீது பலாத்காரம் செய்தல், இயற்கையை மீறிய வன்புணர்ச்சி, மிரட்டுதல், சிறை வைத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிராங்கோவை நேற்று முன்தினம் இரவு 9.15க்கு கோட்டயம் போலீஸ் கிளப்புக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, வழியில் நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதால், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காலை 9.45 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பிராங்ேகாவை கோட்டயம் போலீஸ் கிளப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சிறிது ஓய்வுக்கு பிறகு, நண்பகல் பாலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு செய்தனர். தொடர்ந்து, பிராங்கோவை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு இந்த மனுக்களை விசாரித்த மாஜிஸ்திரேட், ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். மேலும், பிராங்கோவை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். விசாரணைக்குப் பிறகு நாளை பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார். பிராங்கோவை போலீசார் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஆண்மை பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. இன்றும் நாளையும் குரவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்திரி ஆஸ்ரமம், தொடுபுழா பகுதிகளுக்கு அவரை அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி