வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் ஆலங்காயம் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் வாணியம்பாடி சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக வந்த மினி சரக்கு லாரியை மடக்கி சோதனை செய்தபோது, ₹8 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதில் இருந்த டிரைவர் பாபு(42), உடன் வந்த சுமேந்தர்(38) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் லாரியின் பின்னால் ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த வாணியம்பாடி ரங்காராவ்(30) என்பவரையும் இதுதொடர்பாக கைது செய்தனர்.