சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 3 தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ஒரு வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். துபாயில் இருந்து நேற்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த ஷேக் உசேன் (32) என்பவர், ஒரு பையை தோளில் அணிந்தபடி வந்தார். அவரிடம் சுங்க வரி செலுத்தும் பொருட்கள் இல்லாததால் அனுப்பி வைத்தனர். எனினும், அந்த வாலிபர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மீண்டும் அவரை வரவழைத்து, பையை சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. அதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சுங்க இலாகா அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை ஒரு தனியறைக்கு அழைத்து சென்று உடைகளை சோதனை செய்தனர்.