புதுடெல்லி: ‘‘சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகின்றன’’ என மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் சர்மா குற்றம் சாட்டினார். ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா பேசியதாவது: லோக்பால் அமைப்பை மோடி அரசு இன்னும் ஏன் அமைக்கவில்லை என்பதை அறிய விரும்புகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஐ.மு. கூட்டணி ஆட்சியில் பிரதமர் மீது கூட அடிப்படை ஆதாரமில்லாமல் நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வங்கியில் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என மக்கள் தற்போது உணரவில்லை. அவர்களின் பணத்தை நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி போன்றோர் நாட்டைவிட்டு வெளியே எடுத்து சென்று விட்டனர். அவர்களுடன் மன்மோகன் சிங் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற செயல்கள் அவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.