புதுடெல்லி: டெல்லியில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக கால வரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர் ஜெயினின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த ஒருவாரமாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து ஏழு நாட்களாக உணவு உட்கொள்ளாததால் ஏற்கனவே அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மிகவும் சோர்வுற்று காணப்பட்ட ஜெயினின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் உடல்நலம் தேறி நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அமைச்சர் ஜெயின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து இருந்தார்.