சென்னை: தனது 94வது வயதில் சிங்கீதம் சீனிவாச ராவ், ‘சிங் கீதம்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி முடித்துள்ளார். வரும் 11ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.
இதில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசியதாவது:
நாங்கள் முதல்முறையாக மும்பையில் சந்தித்தபோது இரு கதைகளை சொன்னார். ஒன்று ‘அத்வைதா’. இதை கேரளாவில் பேசினோம். அந்த கதைதான் ‘புஷ்பக விமானம்’ படமானது. மற்றொரு கதையை உடனே படமாக்க முடியவில்லை. அதுதான் ‘சிங் கீதம்’.சினிமா என்பது பேஷன் சார்ந்தது. பிறகுதான் அது ஒரு வியாபார மாக மாறுகிறது. இன்று நிலமை தலைகீழாக இருக்கிறது. ஒரு படத்தை உருவாக்குவதற்கு முன்பே அது 100 கோடி, 200 கோடி வசூல் செய்யுமா என்று கணக்கு பார்க்கின்றனர்.
15 லட்ச ரூபாயில் உருவாக்கிய ‘புஷ்பக விமானம்’ படம், எங்களுக்கு 150 கோடி ரூபாய் படத்தை உருவாக்கிய திருப்தியை தந்தது. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துக்காக முதல் 20 நாட்கள் படமாக்கியிருந்த காட்சிகளை அப்படியே விட்டுவிட்டோம். அது தொடர்ந்திருந்தால், அது ஒரு தோல்வி படமாகவே அமைந்திருக்கும். அந்த படத்தில் நான் எப்படி உயரம் குறைவான மனிதனாக (அப்பு) நடிக்க போகிறேன் என்பது 3 ஷாட்டுகளுக்கு பிறகு அவருக்கே தெரியாது. பலத்த யோசனைக்கு பிறகே சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தோம்.
