இந்திய திரைத்துறையில் நடிகர், நடிகைகளின் சம்பள விஷயத்தில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. உடனடியாக இது மாற்றப்பட வேண்டும் என்று காஜல் அகர்வால் பேசியுள்ளார். அவரது கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போது திரையுலகில் பல நடிகர், நடிகைகளுக்கு இடையே காணப்படும் சம்பள பாகுபாடு குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து இன்னும் பலர் பேசுவார்கள் என்று நம்புகிறேன். சம்பள விஷயத்தில் பாகுபாடு இல்லை என்று சொல்ல முடியாது. இந்த நிலை உடனே மாற வேண்டும். ஆங்காங்கே சில மாற்றங்கள் மெதுவாக நடந்து வருகிறது. இன்றுள்ள திரைத்துறை கார்ப்பரேட் மயமாகி விட்டது.
இதுதான் ஆட்டத்தின் விதிகளை மாற்றியிருக்கிறது. எனினும் நடிகர், நடிகைகளின் சம்பளத்துக்கு இடையே இருக்கும் வித்தியாசம் அதிகமானது. எனக்கு தென்னிந்திய திரைத்துறை மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது. காரணம், அங்குதான் எனது திரைப்பயணத்தை தொடங்கினேன். அங்கு 9 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுவது இல்லை. பாலிவுட்டில் எனக்கு கிடைக்காத சில வசதிகள், தென்னிந்திய திரையுலகில் கிடைக்கிறது. இங்கு காணப்படும் ஒழுக்கம், சரியான நேரத்தை பின்பற்றுவது, பெண்களுக்கு அதிக மரியாதை தருவது போன்ற விஷயங்களை குறிப்பிடலாம்’ என்றார்.
