மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார், நடிகை ட்விங்கிள் கன்னா தம்பதியின் மகன் ஆரவ், தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங்கில் பயிற்சி பெற்றார். தனக்கு தேவையான உணவை தானே சமைத்து சாப்பிட்டார். நடிக்க மறுத்துவிட்டு, கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகள், பிரிண்டிங் குறித்து தெரிந்துகொள்ள சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவரை பற்றி அக்ஷய் குமார் கூறியதாவது:
ஆரவ்விற்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் கிடையாது. சொந்தமாக எதையாவது செய்து முன்னேற வேண்டும் என்று பாடுபடுகிறார். பேஷன் டிசைனிங்கில் அதிக ஆர்வம் காட்டுகிறார். பணியாற்றிக்கொண்டே அதை கற்று வருகிறார். இப்போது அவர் 4,500 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றுகிறார். பேஷன் கலையை முழுமையாக தெரிந்துகொள்ள கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். எனக்கும், ஆரவ்விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இல்லை.
மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் அறிவுரை சொல்வது இல்லை. குறிப்பாக, என் மகனுக்கு நான் அட்வைஸ் செய்வது கிடையாது. யாரையும் மனம் வருந்தும்படி நடந்துகொள்ள வேண்டாம் என்று மட்டும் சொல்லியிருக்கிறேன். மற்ற விஷயங்களை எல்லாம் அவரே பார்த்துக்கொள்கிறார்.
